பெங்களூரு,
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதற்கிடையே மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் கர்நாடக அரசு அனுப்பிய மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார்.
இந்த அவசர சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.