பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று பெங்களூரு தகவல் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் கர்நாடக மாநிலத்தின் அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசியதாவது:-
கொரோனா பரவ தொடங்கிய பிறகு வளர்ச்சிக்கான காரணங்கள் மாறிவிட்டன. கொரோனாவை எதிர்கொள்வதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தொழில்நுட்பத்தை மாநில அரசு பயன்படுத்தி கொள்கிறது. தொழில் வளர்ச்சிக்கு கர்நாடக அரசு முக்கியமான கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியுள்ளன. அதனால் தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.
கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். இதனால் உலக அளவில் கர்நாடகம் முன்னணி நிலைக்கு வரும். புதிய தொழில்களை தொடங்குவதில் கர்நாடகம் சர்வதேச அளவில் முக்கிய இடத்தில் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் கர்நாடகத்திற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு 40 சதவீதம் ஆகும்.
கர்நாடகம் வரும் நாட்களில் உயிரி பொருளாதாரத்திலும் முதல் இடத்தை பிடிக்கும். உயிரி அறிவியலை ஊக்கப்படுத்த விரைவில் கர்நாடகத்தில் அது தொடர்பான பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.