photo credit: The New Indian Express 
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி: கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்

இஸ்லாமில் ஹிஜாப் அணிவது கட்டாயம் எனக்கூறுவது பெண்களை மீண்டும் நான்கு சுவற்றுக்குள் தள்ளும் முயற்சி என கேரள கவர்னர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி என்று விமர்சித்தார். பிரபல் தனியார் ஆங்கில நாளிதழ் குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கேரள கவர்னர் ஆரிப் கான் மேலும் கூறுகையில்,

கல்வி நிறுவனங்கள் சீருடை விதிகளை விதிக்கலாம். கர்நாடக ஹிஜாப் விவகாரம் சர்ச்சை அல்ல, சதி. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்துபவர்கள், மதத்தின் அடிப்படையிலான அடையாளங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துவார்கள்.

இந்த சதிகளின் நோக்கமே பெண்களை முடக்க வேண்டும் என்பதுதான். கல்வி மட்டுமே புதிய பாதையை வகுக்கும். பெண்களை மீண்டும் நான்கு சுவற்றுக்குள் அடைக்க அவர்கள் முனைவார்கள். அடையாளங்களுக்குக் கல்வி பலியாவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.