தேசிய செய்திகள்

ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல்

ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை மாநில அரசு அறிவித்தது. இரவு நேர ஊரடங்கு முதலில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றி அமைத்து அரசு உத்தரவிட்டது. மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மே 1 முதல் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் போது கர்நாடகா அரசு ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும். இதற்காக முதல் கட்டத்தில் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 28 ந்தேதி முதல் தடுப்பூசிக்கு தங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT