தேசிய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: டெல்லியில் நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே 2 முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

டெல்லி,

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19ம் தேதி என 2 முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜரானார். அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் விஜய் இடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார். மேலும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தவெகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை விஜய் நேர்காணல் நடத்த இருந்த நிலையில் நாளை டெல்லியில் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.