ஸ்ரீநகர்,
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறிவைத்து தாக்கப்படும் இந்த தாக்குதல்களால் காஷ்மீரில் வசித்து வரும் காஷ்மீர் பண்டிட்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பண்டிட் இனத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை பண்டிட் குடும்பங்கள் நேற்று வெளியேறின. பண்டிட்களின் பல குடும்பத்தினர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர், வெளியில் செல்வதற்கே பயமாக இருக்கிறது என்று ஷிகாபோரா குடியிருப்பில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கூறினார். காஷ்மீர் பண்டிட்களின் குடியிருப்பில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதனால் குடியிருப்புக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம். வெளியில் சென்றால் என்ன நடக்குமோ எனவும் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.