புதுடெல்லி,
கேரளாவில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள இடதுசாரி கூட்டணி வரும் தேர்தலில் வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேநேரத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கேரளாவில் ஆட்சியை பிடிக்க யாருக்கு வாய்ப்பு என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சிஎன்என்-நியூஸ்18 நடத்திய வோட்வைப் என்ற கருத்துக்கணிப்பில், கேரளாவில் கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் என இரண்டு கூட்டணிகளுமே சுமார் 36 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 14.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்டிஎப் கூட்டணி 68 முதல் 73 தொகுதிகளிலும், யுடிஎப் கூட்டணி 64 முதல் 70 தொகுதிகளிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.