கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு இடையே இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதியவரின் மகள் ராணிமோல் என்னுடைய தந்தையை கோட்டயம் அரசு மருத்துவமனைக்கும் இரு தனியார் மருத்துவமனைகளுக்கும், கொண்டு சென்றேன். ஆனால் அங்கு யாரும் சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இதனால் என்னுடைய தந்தை உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனைகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் செயற்கை சுவாசம் வழங்குவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினாலே வேறு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராணிமோல் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
தந்தை உயிரிழந்ததும் கோட்டயம் மருத்துவமனைக்கு மீண்டும் சென்ற ராணிமோல் அங்கிருந்த அதிகாரிகளை தாக்கியுள்ளார். இதற்கிடையே குற்றம் உறுதியானல் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு கூறியுள்ளது.
ராணிமோல் பேசுகையில், இதுபோன்றதொரு நிலை யாருக்கும் நடக்க கூடாது. மூன்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். என்னுடைய தந்தை நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடினார். ஆனால் யாரும் அவரை காப்பாற்ற வரவில்லை, சிகிச்சையும் அளிக்க முன்வரவில்லை. அவருக்கு மோசமான நிலை ஏற்பட்டதால் இடுக்கியில் இருந்து கோட்டயம் வந்தோம். இவ்விவகாரத்தில் என்னுடைய போராட்டம் சட்டரீதியாக தொடரும், எனக் கூறியுள்ளார்.