திருவனந்தபுரம்
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதுபோல் கேரளாவிலும் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானத்தை கேரள சட்டசபியில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கேரள சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இன்று சட்டசபையில் இந்த தீர்மானத்தை முன்வைத்தார். இதையடுத்து சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசிடம் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோன்று மற்ற மாநிலங்களும் மத்திய அரசு இலவச தடுப்பூசி தர வலியுறுத்துமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.