தேசிய செய்திகள்

கேரளம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ

பிரதமர் மோடியுடன் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்கள் சிலர் உடனிருந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் வரும் ஏப். 9-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் அணிகளுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளம் சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இன்று மாலையில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினார். அப்போது, பிரதமர் மோடியுடன் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்கள் சிலர் உடனிருந்தனர். அவர்கள் அனைவரும் கைகளில் தாமரை சின்னம் பதிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, சாலையின் இருபுறங்களிலும் நின்ற மக்களிடம் கையசைத்து வாக்கு சேகரித்தனர்.

இதனிடையே, மக்கள் நெருக்கடி மிகுந்த திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதிகளில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றதால் அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மலர்களை கொண்டு தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.