தேசிய செய்திகள்

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டிய மாநிலத்தில் மீட்கப்பட்டது.

திருப்பதி,

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது இவருடைய 1 வயது ஆண் குழந்தை வீரேசை காணவில்லை.

இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது உறுதியானது.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இந்தநிலையில் மராட்டிய போலீசாரின் உதவியுடன் திருமலை போலீசார், லத்தூர் பகுதியில் குழந்தையோடு சுற்றித்திரிந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் லத்தூர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (57) என்பது தெரியவந்தது. அவர் குழந்தையை கடத்தியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், குழந்தை வீரேசை பத்திரமாக மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT