லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையை தூண்டியதற்காக உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையில் உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.
மேலும் விசாரணையை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது விசாரணையை தள்ளிவைக்க முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, இதுவரை 34 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் 4 சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று கூறினார்.
பிற சாட்சிகளிடம் ஏன் வாக்குமூலம் பெறவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.