புதுடெல்லி,
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 24.03.2018 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனைப் பெற்ற லாலு பிரசாத் யாதவ் , மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். தற்போது, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்த நிலையில், ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலமாக அழைத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இதையடுத்து, ராஜ்தானி ரயில் மூலமாக 16 மணி நேர பயணத்திற்கு பின் டெல்லி அழைத்து வரப்பட்டதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஜார்கண்ட் மந்திரியும் மாட்டுத்தீவன ஊழல் குறித்து புகார் கூறியவர்களில் ஒருவருமான சார்யூ ராய் , வருத்தம் தெரிவித்து உள்ளார். பீகார் முன்னாள் முதல் மந்திரியின் பயணச் செலவுக்கான தொகையை அளிக்க ஜார்கண்ட் அரசு மறுப்பு தெரிவித்தது ஏற்புடையது அல்ல. இது முதிர்சியற்ற முடிவு. உண்மை நிலை என்னவென்று தனக்கு தெரியவில்லை. எனினும், மோசமான உடல் நிலையில் லாலு இருப்பதால், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு இருக்கவேண்டும் என்றார்.