மும்பை,
மும்பையை சேர்ந்த 92 வயதான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஜனவரி 8ந்தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தெற்கு மும்பையில் உள்ள, 'பிரீச் கேண்டி' மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், மராட்டிய மாநில மந்திரி ராஜேஷ் டோபே இன்று மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அப்போது அவர் மருத்துவர்களிடம் லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் பிரதித் சம்தானியிடம் பேசினேன்.
முன்னதாக, அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சில நாட்கள் சிகிச்சையில் இருந்தார். இப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை. ஆக்சிஜன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.அவர் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்று தெரிவித்தார்.