பாலசோர்,
ஒடிசாவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ.) ஒப்பந்த முறையில் கேமிராமேனாக பணியாற்றியவர் ஈஷ்வர் சந்திர பெஹேரா. இவர் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு, டி.ஆர்.டி.ஓ.வின் ரகசிய மற்றும் முக்கிய தகவல்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய பரிசோதனை ஆகியவற்றின் தகவல்களை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின் வழக்கின் முக்கியத்துவம் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் ஒடிசா சி.பி.சி.ஐ.டி.யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஒடிசாவின் பாலசோரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழ கிழமை வழங்கிய தீர்ப்பில் பெஹேராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.