தேசிய செய்திகள்

கடந்த 5-6 ஆண்டுகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அமைதியாக இருப்பது இதுவே முதல் முறை - ராணுவ தளபதி நரவனே

கடந்த 5-6 ஆண்டுகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அமைதியாக இருப்பது இதுவே முதல் முறை என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிப்பது என இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு ராணுவமும் முடிவு எடுத்து கடந்த மாதம் அறிவித்தன. இதனால் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த மாதத்தில் (கடந்த 25 நாட்களாக) காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம்கூட கேட்கவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அமைதியாக இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது என குறிப்பிட்டார்.

மேலும், நமது முக்கிய பிரச்சினை, அவர்கள் (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்பதாகும். அதை அவர்கள் நிறுத்தாதவரையில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. பல ஆண்டுகளில், ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT