பானஜி,
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் கோவா மாநிலத்தில் 29-ஆம் தேதி ( நாளை) முதல் மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாளை இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். ஓட்டல்கள், பார்கள், ஆகியவை திறக்க அனுமதி இல்லை. பொது போக்குவரத்து முடக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.
கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,110- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கோவாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 81,908- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,086- ஆக உள்ளது.