தேசிய செய்திகள்

உள்நாட்டில் தயாரான முப்படைகளுக்கான தளவாடங்கள்; பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு

நாட்டின் முப்படைகளுக்கு தேவையான உள்நாட்டிலேயே தயாரான ராணுவ தளவாடங்களை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

ஜான்சி,

ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களை முப்படைகளுக்கும் வழங்கும் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பிரதமர் மோடி, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டரை பிரதமர் மோடி இந்திய விமான படைக்கு இன்று முறைப்படி வழங்கினார்.

இதேபோன்று, இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களுக்கு தேவையான நவீன மின்னணு போர் கருவிகளையும், இந்திய ராணுவத்துக்கு தேவையான, உள்நாட்டிலேயே தயாரான ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து ரூ.400 கோடி மதிப்பில் உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் துறை தாழ்வாரத்தின் ஜான்சி முனை திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT