தேசிய செய்திகள்

தேர்வுகளில் ‘லவ் லட்டர்’, பாடல் வரிகளை எழுதிய மாணவர்கள் 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட்! சட்டக் கல்லூரி அதிரடி

தேர்வுகளில் பதிலாக காதல் கடிதங்கள் மற்றும் திரைப்பட பாடல் வரிகளை எழுதிய மாணவர்களை சட்டக் கல்லூரி சஸ்பெண்ட் செய்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலாக தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை பக்கம், பக்கமாக எழுதி உள்ளனர். காதல் கடிதங்களையும் எழுதி வைத்து உள்ளனர். அவள் நான் சொல்வதை கேட்பது கிடையாது, அவள் இஷ்டம் போல் நடக்கிறாள், என்றெல்லாம் எழுதி வைத்து உள்ளனர். இதுபோக பிரபலமான இந்தி மற்றும் பெங்காலி பட பாடல் வரிகளையும் எழுதி உள்ளனர். தங்கள் மனதில் இருந்த பாடல்களை எல்லாம் எழுதி உள்ளனர், அதில் ஆபாசம் எதுவும் உள்ளதா என்பதை எல்லாம் அவர்கள் சிந்திக்காமல் எழுதி உள்ளனர்.

கல்லூரி 4வது செமஸ்டர் தேர்வை எழுதிய மாணவர்கள்தான் இந்த காரியத்தை செய்து உள்ளனர். மாணவர்கள் பதில் எழுதிய பேப்பர்கள் திருத்தம் செய்யப்பட்டது, அப்போது திருத்தம் செய்த ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சட்டக் கல்லூரில் சட்டம் படித்து, சட்டம் தொடர்பான தேர்வுகளில் பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. புதன் கிழமை இதுபோன்று எழுதிய மாணவர்கள் 10 பேரை (மூன்று மாணவிகளும் அடக்கம்) 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்தது. பல்கலைக்கழகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்திதான், இவர்கள் மீது நடவடிக்கையை எடுத்து உள்ளது.

கல்லூரியில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாவது செமஸ்டரில் 181 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 72 பேர் நான்காவது செமஸ்டர் தேர்வு எழுதினர். அதனுடைய முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாது. இரண்டாவது செமஸ்டர் எழுதியவர்களில் வெறும் 25 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். நான்காவது செமஸ்டர் எழுதிய 72 பேரில் ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்று உள்ளார். இதனையடுத்து மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். விடைத்தாள்கள் சரியாத திருத்தப்படவில்லை என குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவமும் நேரிட்டது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பேசுகையில், நாங்கள் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக அவர்களுடைய பதிவு எண்ணை ரத்து செய்யவில்லை. அவர்கள் இரண்டு வருடங்கள் கழித்து இதே பிரிவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம், இவர்களை இப்படியே விட்டால் மற்ற மாணவர்களும் இதுபோன்றுதான் செயல்படுவார்கள், என கூறிஉள்ளார்.