போபால்,
மத்திய பிரதேச முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார்.
இந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.
கொரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பேபாலில் நடைபெற்ற விழாவில் பா.ஜனதா தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங், துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.