மும்பை,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வெளியான தகவலின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு நாளுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன், அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் மராட்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, மருத்துவ கல்வி இயக்குனர் டி.பி.லகானே உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் விரைவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.