கன்னூர்,
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தின் நீட்சியாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சிலைகள் உடைக்கப்படும் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகள் சிலைகள் அவமதிக்கும் சம்பவம் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இந்தகுற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதில், சிலை சேதம் அடைந்தது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. இதையடுத்து, சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.