லண்டன்,
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் 2ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்தை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4ந்தேதி முதல் 14ந்தேதி வரை (8ந்தேதி நீங்கலாக) தொடர்ந்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இங்கிலாந்தின் அரசு வழக்குகள் சேவை நிறுவனம் இந்தியாவுக்காக ஆஜராகிறது. இந்த வழக்கின் முன் விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜரானார்.