தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை

பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை நடத்தினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட 4 தொகுதிகள் மட்டுமே குறைவாகும். இந்த மகத்தான வெற்றியில் மிதந்துவரும் பா.ஜனதா கட்சியினர், எங்களது அடுத்த இலக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறிவது தான் என கூறிவருகின்றனர்.

மாநிலத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜிக்கு கடும் சவாலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜி அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி.யும் கலந்துகொண்டார். மம்தா விரும்பினால் வருங்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற கிஷோர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.