தேசிய செய்திகள்

ஊடுருவல்காரர்களுக்கு மம்தா அரசு பாதுகாப்பு அளிக்கிறது: பிரதமர் மோடி தாக்கு

திரிணாமுல் காங்கிரஸ் தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்கள்தொகை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று மோடி கூறினார்.

. மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வட வங்கத்தின் கூச்பெஹாரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மால்டாவில் நீதித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அரசு, சாதாரண மக்களை எப்படி காப்பாற்றும்? இதுதான் திரிணாமுல் காங்கிரசின் உண்மையான முகம். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்கள்தொகை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மம்தா அரசு, இந்து அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்க்கிறது. எல்லையோர மாவட்டங்களில் ஊடுருவல்காரர்களால் உள்ளூர் மக்களின் அடையாளம் கேள்விக்குறியாகியுள்ளது.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 'லட்சாதிபதி திதி' திட்டங்கள் மூலம் உண்மையான அதிகாரம் வழங்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் செய்த ஒவ்வொரு அநீதிக்கும் சட்டப்படி கணக்கு தீர்க்கப்படும்"இவ்வாறு அவர் பேசினார்.