லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மயங்க் (வயது 12) என்ற மகன் இருந்தார்.
இதனிடையே, மதுபோதைக்கு அடிமையான ராஜேஷ் குடித்துவிட்டு தனது மனைவியிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும், மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயரில் எழுதி வைக்கும்படி சண்டையிட்டு வந்தார்.
இந்நிலையில், ராஜேஷ் நேற்று மீண்டும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மிளா கணவரை கண்டித்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
மனைவி வேலைக்கு சென்றபோதும் ஆத்திரம் அடங்காத ராஜேஷ் மதுபோதையில் வீட்டில் இருந்த தனது மகன் மயங்க்கை கத்தியால் குத்திக்கொன்றார்.
பின்னர், மகனின் உடலை வீட்டில் ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊர்மிளா பெட்டியில் ரத்த வெள்ளத்தில் மகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.