புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
இதனை தொடர்ந்து, 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. அதன்படி, பிரதமர் மோடியின் வானொலி வழியேயான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது.
இதில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடன் உரையாடுவது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது என கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசும்போது, இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர்.
பழங்குடி வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. அதற்கென்று சொந்த சவால்களை கொண்டுள்ளது. இவை எல்லாம் இருந்தபோதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்.
பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அது நாம் அனைவருக்கும் பெருமைக்கு உரிய விசயம்.
சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.