தேசிய செய்திகள்

இந்தியாவின் சுரு நகரில் பதிவான உலகின் அதிக வெப்பநிலை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் நேற்றைய தினத்திற்கான உலகின் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

சுரு,

கோடை காலம் தொடங்கிய பின்பு நாடு முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாட்டில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வது முடங்கி போயுள்ளது.

நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. இதுபற்றி சுரு நகரில் அமைந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக் கூறும்பொழுது, நாட்டில் 50 டிகிரி செல்சியஸ், நேற்றைய நாளுக்கான அதிக வெப்பநிலையாக சுரு நகரில் பதிவாகி உள்ளது.

இதே 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பாகிஸ்தான் நாட்டின் ஜகோபாபாத் நகரிலும் பதிவாகி உள்ளது. நேற்றைய நாளில் உலகின் மிக அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளாக சுரு மற்றும் ஜகோபாபாத் நகரங்கள் இருந்தன என தெரிவித்து உள்ளார்.