தேசிய செய்திகள்

ஊடகங்கள் வெளியிடும் ஊழல் குறித்த தவறான செய்தியை அவதூறாக கருத முடியாது

பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் தாயார் அந்த மாநிலத்தில் மந்திரியாக இருந்தார். அந்த பெண்ணுக்கு பீகார் தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பகுதியில், உணவு பதப்படுத்தும் ஆலை தொடங்க நிலம் ஒதுக்கப்பட்டது.

புதுடெல்லி,

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தி டெலிவிஷனில் இதுதொடர்பாக செய்தி வெளியானது. இது தன்னை அவதூறாக சித்தரிப்பதாக கூறி அந்த பெண் தொடர்ந்த வழக்கை விசாரிக்க கீழ்நீதிமன்றத்திற்கு பாட்னா ஐகோர்ட்டு தடை விதித்து.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த பெண் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஜனநாயகம் உள்ள நாட்டில் சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ள வேண்டும். அவதூறு என்பது அரசியல் சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் ஊழல் குறித்து வெளியான தவறான செய்தியை அவதூறாக கருத முடியாது. ஊழல் குறித்து செய்தி வெளியிடும்போது அதில் சிறு தவறு நடந்திருக்கலாம் அல்லது கூடுதல் ஆர்வம் காட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் நாம் ஊடகங்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும். செய்தி வெளியானதில் தவறு இருந்திருக்கலாம். அதற்காக அதை அவதூறாக கருதக்கூடாது என்று கூறியுள்ளனர்.