புதுடெல்லி,
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய வகையிலான இந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் மிக குறுகிய பகுதியில் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டதில் அவர்கள் சிக்கி கொண்டனர்.
நுழைவு பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதில், உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. இதில் பலர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு விகாஸ் குமார் கூறும்போது, 16 உடல்களை இதுவரை மீட்டுள்ளோம். ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார்.
தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கி கொண்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார். இந்த சம்பவத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
16 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த நபருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்த நிதி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும்.