தேசிய செய்திகள்

ராணுவ ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: இரண்டு வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் கரேன் செக்டார் பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டில், ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட ராணுவத்தினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாளை காலை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்திற்கு ராஜ்நாத்சிங் செல்ல உள்ளது கவனிக்கத்தக்கது.