புது டெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, வாகன அழிப்பு கொள்கைப்படி ஊக்கத்தொகை மற்றும் புதிய கட்டண தொகை பட்டியலை நேற்று வெளியிட்டது.இந்த ஊக்கத்தொகை மூலம் பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவற்றை புறந்தள்ள அதிகம் முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பழைய வாகனங்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவும் அதிகம். மேலும், அதிக எரிவாயு செலவும் ஏற்படுகிறது.
புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு பதிவு செய்யும் கட்டணத்தில் சில சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன.அச்சலுகைகளை பெற, பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களை அழிக்கும் மையத்தில் இருந்து பெறப்பட்ட, பழைய வாகனத்தை ஒப்படைத்ததற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.பழைய வாகனத்தை பயன்படுத்த வேண்டுமானால் அந்த வாகனங்களுக்கான வாகன தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
*15 வருடங்களுக்கு மேலான மோட்டார் வாகனங்களுக்கு, வாகன தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், வாகன தகுதி சான்றிதழை புதுப்பிக்க ஆகும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*15 வருடங்களுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு, வாகன தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*தனிநபர் உபயோக வாகனங்கள், 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களாக இருக்குமாயின், வாகன தகுதி சான்றிதழை புதுப்பிக்க ஆகும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று 2021-2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதி அமைச்சர், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பான வாகன அழிப்பு கொள்கை அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தாமாக விரும்பி தகுதியில்லாத வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருக்கும் தனிநபர் உபயோக வாகனங்கள், அவற்றிற்கான வாகன தகுதி சான்றிதழ் பெற தானியங்கி மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.வர்த்தக போக்குவரத்து வாகனங்களாக இருக்குமாயின் 15 வருடங்கள் முடிந்தவுடன் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.