ராஞ்சி,
கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாததால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்காக இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற கருவிகள் தேவைப்படுகின்றன.
ஆனால் இந்த கருவிகளை வாங்க முடியாததால், ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழை மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த சோக நிகழ்வுகளில் இருந்து ஜார்கண்ட் ஏழை மாணவ-மாணவிகளை பாதுகாக்க, மாநில போலீசார் சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது வசதியுள்ள மக்களிடம் இருந்து பயன்படுத்தாத செல்போன், லேப்டாப் போன்ற கருவிகளை தானமாக பெற்று ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செல்போன்-லேப்டாப் வங்கி (கேட்ஜெட் வங்கி) ஒன்றை தொடங்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை போலீஸ் டி.ஜி.பி. நீரஜ் சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பல மாவட்டங்களில் இந்த கேஜெட் வங்கி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜார்கண்ட் போலீசாரின் இந்த மனிதாபிமான நடவடிக்கையை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.