புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதைய நிலைமைக்கு மோடி அரசே முழு பொறுப்பு. மேலும் நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்பால் பொதுமக்களுக்கு ஏதும் சிரமம் ஏற்பட்டாலும், அதற்கும் மத்திய அரசே பொறுப்பாகும். பெரு நிறுவனங்களை ஆதரிப்பதில், அமெரிக்காவை மத்திய அரசு பின்பற்றுகிறது. தயவு செய்து அமெரிக்காவை பின்பற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
வேளாண் துறை கார்ப்பரேட்மயம் ஆவது ஏற்க முடியாது எனவும், இதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறிய ஜாக்கர், இந்த சட்டங்களை கொண்டு வந்ததில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் நாட்டு மக்களை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.