புதுடெல்லி,
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு டெல்லி வந்த இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி, அதிகாரிகள் குழுவினரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இதைத்தொடர்ந்து, இன்று காலை
ஜனாதிபதி மாளிகையில் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய மெக்ரான், 'இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சென்ற ஆண்டு மோடி பிரான்ஸ் வந்த போது என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை ஒத்துழைப்பில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இருநாடுகளுக்கிடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவு வரலாற்று சிறப்புமிக்கது' என கூறினார்.
அதன்பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் இம்மானுவேல் மெக்ரான் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி -இம்மானுவேல் மெக்ரான் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்த விவரத்தையும் இது குறித்த படங்களையும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.