புதுடெல்லி,
ஈராக் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான மொசூலை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.
கட்டுமான பணிக்காக சென்ற இந்தியர்கள்
அப்போது, இந்தியாவின் பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மருத்துவமனை கட்டுமான பணிக்காக அங்கு சென்றிருந்த 40 பேர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.
அவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர்.இவர்களின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, இறந்து விட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இறந்தவர்களின் உடலை ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மத்திய மந்திரி விகே சிங், ஈராக் சென்று இதற்கான அனைத்து பணிகளையும் செய்வார் என்று கூறியிருந்தார்.
ஈராக் விரைகிறார் வி.கே.சிங்
இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள் மற்றும் பாகங்களை, இந்தியாவுக்கு கொண்டு வர, வெளியுறவுத் துறை இணை மந்திரி , வி.கே.சிங், நாளை மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி ஈராக் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.