லக்னோ,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அயோத்தியில் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கிக் கொடுத்தது.
அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது. இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி நேற்று அறிவித்தார்.
அவர் அறக்கட்டளையின் தலைவராகவும், தலைமை அறங்காவலராகவும் செயல்படுவார். 15 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். மசூதியுடன் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், நூலகம், ஆஸ்பத்திரி ஆகியவையும் கட்டப்பட உள்ளன.