புதுடெல்லி,
மகாராஷ்டிராவில் சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் தடோபா தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 7 வயது நிறைந்த மத்காசூர் என்ற பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று வசித்து வருகிறது. இந்த நிலையில், தனது குட்டி ஒன்றுடன் நீர் அருந்தவதற்காக கரடி ஒன்று ஜமுன் போடி என்ற நீர்நிலைக்கு அருகே வந்துள்ளது.
ஆனால், உடல் வெப்பத்தினை தணிப்பதற்காக நீருக்குள் இருந்த புலியானது கரடியை தாக்க தொடங்கியுள்ளது. அந்நில பகுதி தனக்கு சொந்தமில்லை என்றாலும், தனது குட்டியை காப்பதற்காக தாய் கரடி, புலியை எதிர்த்து போராடியுள்ளது. இதனை கண்ட குட்டி சத்தமிட்டு கொண்டே அங்குமிங்கும் சுற்றி வந்துள்ளது. கரடி மீது 5 நிமிடங்கள் வரை புலி தாக்குதலை தொடர்ந்தது. பலத்த உறுமலுடன் புலியும், கரடியும் கடுமையாக மோதின.
இந்த சம்பவத்தில் 2 விலங்குகளும் காயமடைந்தன. சண்டை தொடர்ந்த நிலையில் குட்டி கரடி அங்கிருந்து தப்பியோடி விட்டது. கரடியின் உடலில் அதிக ரோமங்கள் நிறைந்து இருந்த நிலையில் புலியால் அதனை பிடிக்க முடியாமல் போனது. பின்னர் கரடி, புலியை பின்தொடர்ந்து சென்று அதனை விரட்டியடித்தது.
கோடை காலங்களில் அதிக வெப்பநிலை கொண்ட இந்நகரில் நீர் பற்றாக்குறையால் விலங்குகள் நீரை தேடி செல்வதுண்டு. காடுகளில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது உண்டு என்றாலும் சுற்றுலாவாசிகள் வந்து செல்லும் இந்த தேசிய பூங்காவிற்குள் முதன்முறையாக புலி மற்றும் கரடி மோதலில் ஈடுபட்டு உள்ளது.