மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறு பரப்பும் கருத்துகளை காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கே.கே. மிஷ்ரா வெளியிட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து அவர் மீது மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் மிஷ்ராவுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி செய்தியாளர்கள் சந்திப்பில், சவுகானின் மனைவி சாதனா சிங்கின் சொந்த ஊரான கோண்டியாவில் இருந்து 19 பேர் போக்குவரத்து துறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என மிஷ்ரா கூறினார். சவுகான் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது மற்ற குற்றச்சாட்டுகளையும் அவர் கூறினார்.
இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிங், மிஷ்ரா குற்றவாளி என உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மிஷ்ரா தரப்பில் கூறப்பட்டு உள்ளது.