மும்பை
மும்பை மாலத் சாலையில் பெரிய சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு மாடல் அழகியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது பெயர் மன்ஸி தீட்சித், ராஜஸ்தான் கோட்டாவை சேர்ந்தவர். இவர் மாடலிங் தொழில் செய்து வந்தார். சிறிய அளவில் வணிக தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். ஆந்தேரியில் உள்ள இன்ஃபினிட்டி மால் அருகில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது.
இவரை யாரோ கொலை செய்து முழு உடலையும் பெரிய சூட்கேசுக்குள் அடைத்து ரோட்டில் வீசி இருந்தனர்.
இந்த சமபவம் தொடர்பாக போலீசார் ஐதராபாத்தை சேர்ந்த முஸம்மில் சையத் (வயது 19) என்பவரை கைது செய்து உள்ளனர். இவர் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முஸம்மில்லிற்கு மாடல் அழகி மான்ஸிக்கும் பழக்கம் இருந்து உள்ளது. சம்பவத்தன்று முஸம்மில் மான்சியை தனது பிளாட்டிற்கு அழைத்து உள்ளார். ஒரு கட்டத்தில் அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் முஸம்மில் மான்ஸியை தாக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் மான்சி உடலை ஒரு பெரிய சூட்கேசில் வைத்து அடைத்து, ஓலா டாக்சி ஒன்றை புக் செய்து விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறி உள்ளார்.
பின்னர் மிட்வே, மலாத் வெஸ்ட் நகரில் உள்ள மைண்ட்ஸ்பேஸ் நகருக்கு செல்லும்படி டிரைவரிடம் கூறி உள்ளார், இது ஒதுக்குபுறமான இடம் என்று கூறப்படுகிறது. அவர் மைண்ட்ஸ்பேஸ் அருகே இறங்கினார், பின்னர் மீதி தூரத்தை ரிக்ஷாவில் செல்வதாக கூறி டிரைவரை அனுப்பி விட்டார். பின்னர் ஒரு புதரில் சூட்கேசை வீசி விட்டு, வீட்டுக்கு ரிக்ஷாவில் திரும்பி உள்ளார்.
அதே ரோட்டில் ஓலா டிரைவர் திரும்பி வரும்போது, ரோட்டோரம் புதரில் சூட்கேஸ் இருப்பதை பார்த்து போலீசிடம் தகவல் கொடுத்து உள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸம்மிலை கைது செய்து உள்ளனர்.