கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. கடந்த 22-ந் தேதி இரவு, ஹூக்ளி மாவட்டத்தில் லால்சந்த் பேக் என்ற திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பா.ஜனதா மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. சந்தேகத்தின்பேரில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்நிலையில், விடுதலை ஆனவர்களில் ஒருவரான காசிநாத் கோஷ் என்ற பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். நகுந்தா கிராமத்தில் நீர்நிலை ஒன்றில் அவரது உடல் சிதிலமடைந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதால், கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.