புதுடெல்லி,
நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் 5 பேரோ அதற்கு மேற்பட்ட நபர்களோ கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில், பணி இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்க வேண்டும், அதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உடல்நலமற்ற முதியோர்களும், சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்களும் வீடுகளில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும். பணி இடங்களில் தெர்மல் பரிசோதனை செய்வதும், கை கழுவுவதற்கு சானிடைசர் திரவம் வழங்குவதும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மதுபானம், குட்கா விற்பனை தடை செய்யப்பட வேண்டும். முக கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம். இவற்றை அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.