அகமதாபாத்,
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக பீகாரின் முன்னாள் ஆளுஞர் ராம்நாத் கோவிந்தும் எதிர்கட்சி சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருமே தலித் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமார் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கு சென்றார்.
மீராகுமாருடன் குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான பாரத்சிங் சொலன்கி மற்றும் சங்கர்சிங் வகிலாவும் உடன் சென்றனர். சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆசிரமத்தில் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீராகுமார் தேசதந்தை மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தில் உள்ளேன். அதற்காக இந்த இடத்தில் இருந்து சில சக்திகளை பெற வந்தேன். காந்திஜீயின் வசித்து ஹிரிடே குஞ்சில் சில மணித்துளிகள் இருந்ததன் காரணமாக வரப்போகும் போட்டியை எதிர்கொள்ளும் மன தைரியம் கிடைத்துள்ளது என்றார். மேலும் அங்கு சென்றதனால் மன அமைதி கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
அதோடு குஜராத் மக்கள் குறிப்பாக ஒடுக்கபட்டவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் எனவும் கூறினார்.
பின்னர் விமான நிலையத்தை அடைந்த அவர் தற்போது நடைபெற உள்ள போட்டி தலித்களுக்கு இடையேயான போட்டி அல்ல, இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஆனால் சிலர் இப்போட்டியை தலித்திற்கு இடையேயான போட்டியாக மாற்ற நினைப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது சுயநினைவோடு வாக்களிக்க கோரிக்கை விடுத்தார்.
இன்று குஜராத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் அவர், நாளை தமிழ்நாடு வர உள்ளார்.