தேசிய செய்திகள்

நளின்குமார் கட்டீல், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி

பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக இருந்து வருபவர் நளின்குமார் கட்டீல். பாராளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தார். மங்களூரு அருகே பஜ்பேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், உடனடியாக அங்கிருந்து கார் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று நளின்குமார் கட்டீலை நேரில் சந்தித்தார். பின்னர் அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரியுடன் மந்திரி அங்காரா, சதானந்தகவுடா எம்.பி., பரத்ஷெட்டி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT