தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு உள்ளார் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிரதமர் மோடி வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பிஎச்டி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். தேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்த விவகாரம் தொடர்பாக, அவரை தாக்கி பேசிய ராகுல் காந்தி, இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்தார், இப்போது ஒவ்வொரு நாளும் சீனா 5000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது, ஆனால் இந்தியா 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்குகிறது என சாடினார்.

மத்திய அரசு கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, அனைத்து பணமும் கருப்பு பணம் கிடையாது, அனைத்து கருப்பு பணமும் பணமாக இல்லை. பிரதமர் அவருடைய மிகப்பெரிய மார்பில் இருந்து அவருடைய பவரை கட்டவிழ்த்துவிட்டு உள்ளார், பிரதமர் மோடிக்கு சிறிய இதயம்தான் என குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் ராகுல் காந்தி, மத்திய அரசு ஒரு சுனாமி வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது, இது மோசமான நிலையை நோக்கியே செல்கிறது என விமர்சனம் செய்து உள்ளார். மோடி அரசு ஒவ்வொருவரையும் திருடனாகவே பார்க்கிறது எனவும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசிஉள்ளார்.