புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய டாக்டர்கள் சங்கம் நாடு தழுவிய '' ஒயிட் அலர்ட் '' என்ற அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இன்று மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு டாக்டர்கள் அமைப்பு கேட்டு கொண்டது. "வெள்ளை கோட்டுடன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். ஒயிட் அலர்ட் ஒரு எச்சரிக்கை மட்டுமே" என்று ஐ.எம்.ஏ தனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தது.
இதனால் மருத்துவ பணிகள் பாதிக்கப்படும் நிலை எழுந்தது. இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் சுகாதார துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் சங்கத்துடன் உரையாடினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.