சண்டிகர்,
பஞ்சாப் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, சில நாட்களுக்கு முன் விவசாயிகளை சந்தித்துப் பேசினார். ஜலந்தர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த அந்த சந்திப்பின்போது, சீக்கிய மத அடையாளங்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஒரு சால்வையை அவர் அணிந்திருந்தார். அதுதொடர்பான வீடியோவை சித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட, அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
சீக்கிய உச்சபட்ச மத அமைப்புகளில் ஒன்றான அகால் தக்தின் தலைவர் கியானி ஹர்பிரீத் சிங், மத அடையாளங்கள் பொறித்த சால்வையை சித்து அணிந்திருந்தது துரதிர்ஷ்டவசமானது, சீக்கிய கொள்கை பாரம்பரியத்துக்கு எதிரானது. அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், நான் எந்த உள்நோக்கமும் இன்றி அந்த சால்வையை அணிந்துவிட்டேன். அதன்மூலம் ஒரே ஒரு சீக்கியரின் உணர்வை புண்படுத்தியிருந்தாலும் அதற்காக மன்னிப்புக்கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.