லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கை (21) மருத்துவம் படிக்க வேண்டும் என வலியுறுத்தி, நீட் தேர்வுக்கு தயாராகும்படி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அக்சத் சிங்கிற்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லாததுபோல் தெரிகிறது. இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மன்வேந்திர சிங் திடீரென காணாமல் போனார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை தொடங்கினர். வீட்டில் சோதித்துப் பார்த்தபோது அங்கு இருந்த ஊதா நிற டிரம்மில் மனித உடல் உறுப்புகள் இருந்தன. இது குறித்து அக்சத் சிங்கிடம் விசாரித்தபோது தனது தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், அக்சத் சிங்கை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.