புதுடெல்லி,
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் வருமான வரித்துறை வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, கடந்த 3-ந் தேதி, 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
அவற்றில் ஒன்று ஐ.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம். ரூ.50 லட்சம்வரை ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் இதில் கணக்கு தாக்கல் செய்யலாம். மற்றொன்று, ஐ.டி.ஆர்.-4 சுகம் படிவம். இது, தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், ரூ.50 லட்சம்வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோர் பயன்படுத்தக்கூடியது.
அத்துடன், இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் 2 பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பங்குதாரர்களாக கொண்டு சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட 2 படிவங்களையும் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது. உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும்.
2-வது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கில் போட்டு வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவழித்தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டியவர்கள் ஆகியோரும் ஐ.டி.ஆர்.-1 படிவத்தை பயன்படுத்த முடியாது.
அறிமுகப்படுத்தப்பட உள்ள தனி படிவத்திலேயே அவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.