தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரிகளின் ஆயுதங்கள் பறிப்பா? - காஷ்மீர் அரசு விளக்கம்

போலீஸ் அதிகாரிகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு காஷ்மீர் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் அதிகாரிகளின் ஆயுதங்களை சிலர் பறித்து சென்றதாக தகவல் பரவியது. இதை காஷ்மீர் மாநில உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா மறுத்துள்ளார்.

இந்த செய்தி, முற்றிலும் பொய். சிலர் திட்டமிட்டு இதை பரப்பி வருகிறார்கள். மக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம். நம்பகமான வட்டாரங்களை ஆலோசிக்காமல், மேற்கொண்டு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று ஷலீன் கப்ரா தெரிவித்தார்.

வதந்தி பரவியதை தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 5 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இணையதள சேவை நேற்று மீண்டும் துண்டிக்கப்பட்டது.

அதே சமயத்தில், மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஸ்ரீநகரில் 190 பள்ளிக்கூடங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை.